காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் திருக்கோயில் பஞ்சபூத தலங்களுள் பிருதிவி தலம் எனும் முதன்மையான தலமாகும். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. 19 ஆண்டுகளுக்கு நேற்று விமரிசையாக கும்பாபிஷேம் நடைபெற்றது. இதற்காக கடந்த 2 ஆண்டுகளாக திருப்பணி நடைபெற்றது. தெற்கு ராஜகோபுரம் புதுப்பித்தல், பல்லவ கோபுரம் புதுப்பித்தல், ஆயிரங்கால் மண்டபம் புதுப்பித்தல், நடராஜர் சன்னதி புதுப்பித்தல், பிரளயகால அம்மன் சன்னதி புதுப்பித்தல், மாவடி சன்னதி புதுப்பித்தல், கருங்கல் தரை அமைத்தல், திருமதில் புதுப்பித்தல், அனைத்து உட்பிர காரங்களும் புதுப்பித்தல், மின் வசதி புதுப்பித்தல், கம்பா நதி குளம் மற்றும் சிவகங்கை தீர்த்த குளம் புதுப்பித்தல், தங்க ரத தேர் கொட்டகை அமைத்தல், புதிய செயல் அலுவலர் அலுவலகம், புதிய கழிவறை மற்றும் புதிய அன்னதான கூடம் அமைத்தல் ஆகிய பல்வேறு திருப்பணி ரூ.20.97 கோடி மதிப்பில் நடைபெற்று முடிந்தன.
கடந்த 6 மாதங்களாக மண்டல இணை ஆணையர் சி.குமரதுரை கோயிலில் முகாமிட்டு திருப்பணிகளை கண்காணித்து வந்தார். தினந்தோறும் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுரை வழங்கி, திருப்பணியை விரைவுபடுத்தினார். குறிப்பாக, கடந்த ஒருமாதமாக இரவிலும் பணி நடைபெற்றது. பஞ்சபூத தலங்களுள் முதன்மையான தலம் என்பதால் கோயிலின் கும்பாபிஷேகத்தை விமரிசையாக நடத்திடுமாறு அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்திரவிட்டிருந்தார். கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் கூடுவர் என்பதால் அடிப்படை வசதி சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன. இணை ஆணையர் சி.குமரதுரையும், அறங்காவலர் ஜென்நாதனும் களத்தில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டனர். 32 இடங்களில் தற்காலிக கழிவறை வசதி, 10க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் வசதி, பக்தர்கள் எளிதாக சுவாமி தரிசனம் செய்திட 500 மீட்டருக்கு கியூலைன், மருத்துவ முகாம் ஆகிவை செய்யப்பட்டு இருந்தது.
கும்பாபிஷேகத்திற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த 4ம்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெற்றன. ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்னிலையில் கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்று முடிந்தது. நேற்று இரவு திருகல்யாண உற்சவம் நடைபெற்றது. உபயதாரர்களால் சீர்வரிசை பொருட்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க ஊர்வலமாக கோயிலுக்கு கொண்டுவரப்பட்டன. 20க்கும் மேற்பட்ட அர்ச்சகர்கள் பங்கேற்று திருகல்யாண உற்சவத்தை நடத்தினர். இரவு 11 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. 3 ஆண்டுக்கு பிறகு திருகல்யாண உற்சவமும் சுவாமி வீதி உலாவும் நடைபெற்றதால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துகொண்டனர். இணை ஆணையர் சி.குமரதுரை தலைமையில் அறங்காவலர் ஜெகன்நாதன், பல்வேறு திருக்கோயில்களின் செயல் அலுவலர்கள், ஆய்வர்கள் ஒரு வார காலம் இரவு, பகலாக உற்சவத்திற்கான பணிகளை மேற்கொண்டனர்.
