தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை சிண்டிகேட்டுக்கு உறுப்பினர் நியமனம் ரத்து செய்ய கோரி வழக்கு: அரசு பதில் அளிக்க ஐகோர்ட் உத்தரவு

 

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக சிண்டிகேட்டுக்கு துணைவேந்தரால் நியமிக்கப்பட்ட உறுப்பினரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரிய வழக்கில் தமிழக அரசு, பல்கலைக்கழக துணைவேந்தர் உள்ளிட்டோர் பதிலளிக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகத்தின் சிண்டிகேட் உறுப்பினராக பேராசிரியர் மதிவாணன் என்பவர் கடந்த அக்டோபர் மாதம் நியமிக்கப்பட்டார்.

அவரது நியமனத்தை ரத்து செய்யக்கோரி மதுரையைச் சேர்ந்த லியோனல் அந்தோனிராஜ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், சிண்டிகேட்டின் ஒப்புதலை பெறாமல், ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லாமல், பல்கலைக்கழக துணைவேந்தரே உறுப்பினரை நியமித்தது சட்ட விரோதம்.அதனால், எந்த தகுதியின் அடிப்படையில் இப்பதவியில் நீடிக்கிறார் என்று விளக்கம் அளிக்குமாறு மதிவாணனுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அடங்கிய அமர்வு, தமிழ்நாடு உயர் கல்வித் துறை செயலாளர், திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர், உறுப்பினர் மதிவாணன் ஆகியோர் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை 3 வாரங்களுக்கு தள்ளி வைத்தது.

 

Related Stories: