ஈரோடு, ஜன. 13: தேசிய அளவில் கடந்த 3 மாதங்களில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக 1600 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் தெரிவித்துள்ளார். தேசிய குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் கலந்தாய்வு கூட்டம் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினர் டாக்டர் ஆனந்த் நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா காலத்தில் குழந்தைகளுக்கு தொற்று வராமல் தடுக்க மாவட்ட நிர்வாகம் எவ்வகையான வழிமுறைகளைக் கையாண்டார்கள், அவற்றில் எவை சிறந்த வழிமுறைகள் என்பதை ஆய்வு செய்துள்ளோம். கலெக்டர், எஸ்பி. ஆகியோர் துறை ரீதியாக அறிக்கை அளித்துள்ளனர். குழந்தை பாதுகாப்பில் ஒரு முன்மாதிரி மாவட்டமாக ஈரோடு திகழ்ந்து வருகிறது. கல்வி, சுகாதாரம், சமூக பாதுகாப்பு இவை மூன்றிலும் முன்மாதிரியாக ஈரோடு உள்ளது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் எந்த வகையில் தடுக்கப்பட்டது?, எவ்வாறு அவர்களுக்கு நீதி கிடைத்தது?, போக்சோ சட்ட வழக்குகளில் எவ்வளவு பேருக்கு நீதி கிடைத்தது?, அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது என்பதையும் விரிவாக கலந்தாய்வில் ஆய்வு செய்யப்பட்டது. குழந்தை திருமணம் தடுப்பு நடவடிக்கையில் ஈரோடு மாவட்டம் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. குழந்தை தொழிலாளர்கள் உருவாகாமல் தடுப்பது, அவர்களை மீட்பது தொடர்பான நடைமுறையை தேசிய குழந்தைகள் காப்பகம் விரைவில் வெளியிடவுள்ளது.