சிறந்த தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு விருதுகள்

மன்னார்குடி, ஜன.12: சிறந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு வட்டார, மாவட்ட மற்றும் மாநில அளவில் விருதுகள் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, திருவாரூர் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட் ராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவதிலும், நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் தோட்டக்கலை பயிர்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. காய்கறிகள், பழங்கள் போன்ற தோட்டப்பயிர்கள் சாகுபடியில் அதிக லாபம் கிடைப்பதால் விவசாயிகளின் ஈடுபாடு தற்சமயம் அதிகரித்து வருகிறது.

இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தோட்டக்கலை பயிர்களை சிறந்த முறையில் தொழில்நுட்ப யுக்திகளை கையாண்டு சாகுபடி செய்துவரும் விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு தமிழக அரசு வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் தலா 10 சாதனையாளர் விருதுகளை விவசாயிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது. அதில், பாரம்பரிய, வீரிய ரகங்கள், ஒட்டு ரகங்கள், நவீன தொழில் நுட்பங்கள், சிறப்பான பயிர் பராமரிப்பு, நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த உரம் மற்றும் பூச்சி நோய் மேலாண்மை, ஒருங்கிணைந்த பண்ணையம், மழைநீர் சேகரிப்பு, அறுவடை பின்சார் தொழில்நுட்பங்கள், சிறப்பான சந்தை மேலாண்மை போன்ற சாதனைகள் புரிந்தவர்களுக்கும், காய்கறிகள், பழங்கள், சுவைதாளிதப் பயிர்கள், மூலிகை, வாசனை திரவியப் பயிர்கள், மலைப்பயிர்கள், மலர்கள் சாகுபடி உள்ளிட்டவைகளுக்கும் சாதனையாளர் விருதுகள் வழங்கப்படவுள்ளது.

மேலும், உயர் தொழில்நுட்ப சாகுபடி, பாதுகாக்கப்பட்ட சாகுபடி, அங்கக இயற்கை விவசாயம், புதிய தனித்துவம் மிக்க மாவட்டத்திற்கே சிறப்பிற்குரிய தோட்டக்கலை பயிர் சாகுபடிக்கான சாதனையாளர் விருதும் வழங்கப்படவுள்ளது. தமிழகத்தில் வசிக்கும் சொந்தமாக நிலம் வைத்திருக்கும் அனைத்து விவ சாயிகளும் இதில் போட்டியிடலாம். ஒரு விவசாயி வட்டார அளவில் ஒரு விருதிற்கு மட்டுமே விண்ணப்பிக்கலாம். வட்டார அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாவட்ட விருதுக்கும் மற்றும் மாவட்ட அளவில் விருது பெற்ற விவசாயிகளிலிருந்து மாநில விருதுக்கும் விவசாயிகளை குழு தேர்வு செய்யும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் இத்துறையின் இணைய தளம் < www.tnhorticulture.tn.gov.in > ல் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதனுடன் விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்தி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஊரிய ஆவணங்களுடன் சமர்ப்பிக்கப்படாத விண் ணப்பங்கள் நிராகரிக்கப்படும். தோட்டக்கலை விவசாயிகள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி தங்களின் தொழில்நுட்ப சாதனைகளை வெளிக் கொணர்ந்து பயன்பெறலாம் என மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குநர் வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

Related Stories: