ஆண்டிபட்டி, ஜன. 12: ஆண்டிபட்டி அருகே, சண்முகசுந்தரபுரத்தில் போலீஸ்-பொதுமக்கள் நல்லுறவு கூட்டம், கிராமப்புற காவலர் திட்ட தொடக்க விழா நடந்தது. ஆண்டிபட்டி டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் தலைமை வகித்தார். இன்ஸ்பெக்டர் சரவணன் தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுல்தான் பாஷா, கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் ரத்தினவேல் வரவேற்றார். டிஎஸ்பி தங்ககிருஷ்ணன் பேசுகையில், ‘பொதுமக்கள் சகோதர பாசம், சமாதானத்துடன் வாழ வேண்டும். மக்கள் நல்ல உணவு பழக்கங்களை கடைப்பிடித்து, குடிக்கு அடிமையாகாமல் உழைப்பில் போட்டிபோட்டு முன்னேற வேண்டும். அப்போதுதான் நோய் தாக்கம் இல்லாத நல்ல சமுதாயம் உருவாகும். தமிழகத்தில் பெண்கள் முன்னேற சட்ட திட்டங்கள் அதிகமாக உள்ளன. பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றங்கள் உள்ளன. பெண்கள் முன்னேற்றத்திற்கு அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
கிராமப்புற காவலர் திட்டத்தை பயன்படுத்தி பொதுமக்கள் காவல்நிலையத்திற்கு வராமல் உங்கள் ஊரிலேயே பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது’ என்றார். தொடர்ந்து கிராமப்புற காவலர் மணிகண்டன், பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.