சென்னை: சென்னை அண்ணாநகரில் உள்ள தொழிலாளர் ஆணையரகத்தில் தமிழ்நாடு உடலுழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் நலவாரியத்தின் 10வது வாரிய கூட்டம் மற்றும் தமிழ்நாடு அமைப்புசாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுது பார்க்கும் தொழிலாளர்கள் நல வாரியத்தின் 8வது கூட்டம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் பேசியதாவது: தற்போது 29 சட்டங்களை ஒருங்கிணைத்து 4 சட்ட தொகுப்புகளாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதனால், கலைஞரால் உருவாக்கப்பட்ட வாரியங்களின் செயல்பாடு என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த விஷயத்தில் நமது முதல்வர் தனி கவனம் செலுத்தியுள்ளார். அனைத்து வாரியங்களின் செயல்பாடுகளும் தற்பொழுது வழங்கப்பட்டு வரும் திட்டங்களும் தொடர்ந்து நடைமுறைப்படுத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
தொழிலாளர் நல வாரியத்தில் 31.07.2025 வரை 2,03,422 தொழிலாளர்கள் பதிவு பெற்றுள்ளனர். திமுக அரசு பொறுப்பேற்ற பின் கடந்த 07.05.2021 முதல் 31.10.2025 வரை இந்த வாரியங்களில் புதியதாக 24,24,226 தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். நலத்திட்ட உதவித்தொகையாக இதுவரை 34,98,037 பயனாளிகளுக்கு ரூ.3123 கோடியே 17 லட்சத்து 80,959 வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அமைப்பு சாரா ஓட்டுநர்கள் மற்றும் தானியங்கி மோட்டார் வாகனங்கள் பழுதுபார்க்கும் வாரியத்தின் வழியாக பெண் மற்றும் திருநங்கை ஓட்டுநர்கள் சுயதொழில் செய்து தங்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் அவர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க தலா ரூ.1 லட்சம் மானியம் பெறும் திட்டம் 2022-23ம் ஆண்டு முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.
2022-23ம் ஆண்டு 500 ஆட்டோக்கள், 2024-25ம் ஆண்டு 1000 ஆட்டோக்கள் வழங்கப்பட்டுள்ளது. 2025-26ம் ஆண்டு 1000 ஆட்டோக்கள் வழங்கப்படும். தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியத்தில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் பணியின் காரணமாக விபத்தில் மரணமடைந்தால் ஏற்கனவே வழங்கப்பட்ட ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர் நல வாரிய செயலாளர் வீரராகவராவ், தொழிலாளர் நல வாரிய ஆணையர் ராமன் உள்ளிட்ட துறை சார்ந்த அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
