சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படம், பெயரை பயன்படுத்த தடை: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: யூடியூப், பேஸ்புக், எக்ஸ், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் தனது புகைப்படத்தை அனுமதி இன்றி பயன்படுத்த தடை விதிக்க கோரி பிரபல இசையமைப்பாளர் இளையராஜா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தன்னை அடையாளப்படுத்தும் வகையில் தனது புகைப்படம், பெயர், இசைஞானி என்ற பட்டப் பெயர், குரல் என எதையும் பயன்படுத்தக் கூடாது.

சமூக வலைதளங்களில் ஏற்கனவே பதிவிடப்பட்ட புகைப்படங்களை நீக்க வேண்டும். அனுமதியின்றி தனது புகைப்படத்தை பயன்படுத்தியதன் மூலம் கிடைத்த வருமான விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த வழக்கு, நீதிபதி என் செந்தில்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது. இளையராஜா தரப்பில் மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் மற்றும் சரவணன் ஆஜராகி வாதாடினர்.

நீதிபதியின் கேள்விக்கு பதிலளித்த இளையராஜா தரப்பு மூத்த வழக்கறிஞர், இளையராஜா புகைப்படம், பெயரை வணிக ரீதியாக பயன்படுத்துகின்றனர். இது தனது தனிப்பட்ட உரிமையை பாதிக்கும் செயல். சில நேரங்களில் அவதூறு கருத்துகளும் பதிவிடப்படுகிறது என்றார்.

இளையராஜா தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, சமூக வலைதளங்களில் இளையராஜாவின் புகைப்படத்தை அனுமதியின்றி பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனுவுக்கு பதில் அளிக்குமாறு யூடியூப் சேனல்களுக்கும் நீதிபதி உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தார்.

Related Stories: