ராமேஸ்வரம், ஜன.7: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மார்கழி அஷ்டமியான நேற்று கோயில் மூன்றாம் பிரகாரத்தில் சுவாமி அம்பாள் உலா நடைபெற்றது. இதையொட்டி நேற்று அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்படிகலிங்க பூஜையும், பின் சுவாமி அம்பாள் சன்னதியில் வழக்கமான கால பூஜைகளும் நடைபெற்றது. தொடர்ந்து கோயில் மூன்றாம் பிரகாரத்தில் ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மார்கழி மாத அஷ்டமி நாளில் சுவாமி, அம்பாள் நகர வீதிகளில் உலா வந்து அருள்பாலிப்பதும் வழக்கம். கொரோனா ஊரடங்கு தளர்வுக்குப்பின் ராமநாத சுவாமி கோயிலில் நடைபெறும் அனைத்து திருவிழா மற்றும் அன்றாட சுவாமி உலாவும் கோயில் வளாகத்திற்குள்ளேயே நடைபெற்று வருகிறது. இதனடிப்படையில் நேற்றும் அஷ்டமி நாளில் கோயிலுக்கு வெளியில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடைபெறாமல், கோயில் மூன்றாம் பிரகாரத்திற்குள்ளேயே நடைபெற்றது.