கள்ளக்குறிச்சியில் பெற்றோரை இழந்த 4 குழந்தைகளும் இனி அரசின் குழந்தைகள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்

 

சென்னை: கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தை சேர்ந்த விவசாய கூலி வேலை செய்யும் குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் கமலக்கண்ணன்-வசந்தி. இவர்களுக்கு லாவண்யா(16), ரீனா(14), ரிஷிகா(12) என்ற 3 மகள்களும், அபினேஷ்(9) என்ற மகனும் உள்ளனர். கமலக்கண்ணனின் மனைவி வசந்தி 7 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் கமலக்கண்ணன் அதே கிராமத்தில் விவசாய கூலி வேலைக்கு சென்று குழந்தைகளை வளர்த்து வந்துள்ளார். சிறுநீரக கோளாறால் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த கமலக்கண்ணனும் நேற்று முன்தினம் உயிரிழந்தார். ஏற்கனவே தாயை இழந்த பிள்ளைகள் 4 பேரும் தந்தையையும் இழந்து என்ன செய்வது என்று தெரியாமல் தவித்தனர்.

தந்தையின் இறுதி சடங்குக்கு பணம் இல்லாமல் கண்கலங்கி நின்றதை அறிந்து பூட்டை கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் தாமாக முன்வந்து வீடு வீடாக பணம் வசூலித்து கமலக்கண்ணனின் இறுதிச்சடங்கை நடத்தி முடித்தனர். பெற்றோரை இழந்து தவிக்கும் 4 பிள்ளைகளின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உதவ வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அந்த குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். இது குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: இந்த நான்கு குழந்தைகளும் இனி நம் அரசின் குழந்தைகள். அவர்களது எதிர்காலத்தை அரசு பாதுகாக்கும். இந்த செய்தியைக் காலையில் படித்ததுமே, மாவட்ட ஆட்சியரை அழைத்து அவர்களது தேவைகளையும் கோரிக்கைகளையும் கேட்டறியச் சொன்னேன்.

நானும் தொலைபேசியில் அவர்களிடம் பேசி, அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றித் தந்து துணை நிற்போம் என உறுதியளித்தேன். மாலை, அமைச்சர் எ.வ.வேலு அவர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்கு தேவையான உடனடி நிதியுதவியை வழங்கியுள்ளார். இந்த நான்கு குழந்தைகளின் எதிர்காலம் சிறக்க, அவர்கள் வாழ்வில் முன்னேறிட நமது திராவிட மாடல் அரசு துணை நிற்கும். இவ்வாறு முதல்வர் எக்ஸ்தள பதிவில் கூறியுள்ளார்.

Related Stories: