தஞ்சை, ஜன.5: தஞ்சையில் பல்வேறு இடங்களில் நகை திருடிய சென்னையை சேர்ந்த வாலிபரை போலீசார் பிடித்தனர். அவர் சுமார் 150 பவுன் திருட்டு நகைகளை வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாக கூறியதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் திருட்டு சம்பவங்களை தடுக்கவும், திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்கவும் எஸ்பி தேஷ்முக்சேகர் சஞ்சய் உத்தரவின்பேரில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு எஸ்ஐக்கள் சந்திரசேகரன், டேவிட் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பவத்தன்று தஞ்சையில் சந்தேகப்படும்படி வந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் சென்னையை சேர்ந்தவர் என்பதும், தஞ்சையில் தங்கியிருந்து பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரியவந்தது. அவரிடம் இருந்து வீடுகளில் திருடிய நகைகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கையை மேற்கொண்டனர். அப்போது அவர், திருடிய நகைகளை 2 நகை வியாபாரிகளிடம் விற்றுவிட்டதாக தெரிவித்தார்.