நிதாரி கொலை வழக்கு.. மரண தண்டனை கைதி சுரேந்திர கோலியை விடுவித்தது உச்ச நீதிமன்றம்!!

டெல்லி: நிதாரி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி சுரேந்தர் கோலியை உச்ச நீதிமன்றம் விடுவித்தது. கடந்த 2006ல் உ.பி.​யின் நொய்​டா​வில் 31வது செக்​டார் குடிசைப் பகு​தி​யில் ஏழைக் குடும்​பங்​களின் குழந்தைகள் தொடர்ந்து காணா​மல் போயினர். அக்​டோபர் 2006ல் பாயல் எனும் இளம்​பெண் காணா​மல் போய் வழக்கு பதிவானது. பாயலின் கைப்​பேசி ஒரு ரிக் ஷா ஓட்​டுநரிடம் இருந்து போலீ​சாரிடம் சிக்​கியது. பிறகு இதனை அவருக்கு வழங்​கிய 31வது செக்​டார் டி-5 பங்​களா​வின் பணி​யாளர் சுரேந்​தர் கோலி போலீசாரிடம் சிக்​கி​னார். விசா​ரணைக்கு பிறகு டி-5 பங்​களா வளாகத்​தி​லும் அதன் முன்​புள்ள கால்​வா​யிலும் டிசம்​பர் 2006ல் தோண்டப்பட்​டது. இதனுள் ஒன்றன்​பின் ஒன்​றாக சடலங்​கள், எலும்​புக்​கூடு​கள், 26 மண்டை ஓடு​களும் வெளியாகி நாட்​டையே உலுக்​கின.

இதன் காரண​மாக பங்​களா உரிமை​யாளர் தொழிலதிபர் மொஹீந்​தர் சிங் புந்​தேர் மீதும் புகார் எழுந்​தது. குழந்​தைகள், பெண்​களை கொலை செய்​ததுடன், சில உறுப்​பு​களை கோலி உட்​கொண்​ட​தாக​வும் விசாரணையில் தகவல் வெளி​யானது. இரு​வரும் கைது செய்யப்பட்டு 10 பெண்​கள் மற்​றும் 19 குழந்​தைகள் கொலை​யான​தாக வழக்கு​கள் பதி​வாகின. வழக்​கு​களின் விசா​ரணை​யில் பங்​களா​வின் பெரும்​பாலானப் பகுதி​களை சிபிஐ உடைத்​துப் பார்த்​தது. குற்​ற​வாளி​களுக்கு பிரைன் மேப்​பிங், நார்​கோட்​டிக் உள்​ளிட்​டப் பலவகை விசாரணைகளை நடத்​தி​யது.

இதன் முடி​வில், பணி​யாளர் சுரேந்​தர் கோலி, ஒரு மனநோ​யாளி எனவும், அவர் குழந்​தைகளை கொன்று அந்த உடல்​களு​டன் தவறான உறவு கொண்​ட​தாக​வும் தெரிய​வந்​தது. இதற்கு கோலி​யின் உரிமை​யாளர் உடந்தையாக இருந்​த​தாக​வும் சிபிஐ தெரிவித்தது. 6 வழக்​கு​கள் மொஹீந்​தர் சிங் மீதும், 13 வழக்​கு​கள் கோலி மீதும் பதி​வாகின. இரு​வர் மீதான வழக்​கு​கள் காஜி​யா​பாத் சிபிஐ நீதி​மன்​றத்​தில் நடை​பெற்​றன. ஜுலை 2007ல் வெளி​யான தீர்ப்​பில் இரு​வருக்​கும் மரண தண்​டனை விதிக்​கப்​பட்​டது. எனினும் மேல்​முறை​யீட்டு வழக்கில் உ.பி.​யின் அலகா​பாத் உயர்நீதி​மன்​றம் அக்​டோபர் 2023ல் இரு​வரை​யும் விடு​தலை செய்​தது. இவர்கள் மீதான குற்​றச்​சாட்​டு​களை நிரூபிக்க, போது​மான ஆதா​ரங்​கள் இல்லை என நீதிபதி​கள் கூறியிருந்தனர்.

இது தொடர்​பான சிபிஐ மற்​றும் உ.பி. அரசின் மேல்​முறை​யீட்டு மனுக்​களை தலைமை நீதிபதி பி.ஆர்​.க​வாய் தலை​மையி​லான அமர்வு தள்​ளு​படி செய்​துள்​ளது. இதனால் மொஹீந்​தர் சிங் புந்​தேர் அனைத்து வழக்​கு​களில் இருந்​தும் முழு​மை​யாக விடுவிக்​கப்​பட்​டார். மேலும், சுரேந்​திர கோலி மற்​றொரு வழக்​கில் சிறை​யில் இருந்தார். இந்நிலையில், நிதாரியில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளி சுரேந்திர கோலியை விடுதலை செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவரை குற்றவாளியாக நிரூபிக்க சேகரிக்கப்பட்ட ஆதாரங்கள், பிற வழக்குகளில் நம்பகத்தன்மையற்றவை என நிரூபிக்கப்பட்டதால் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. கடைசி வழக்கிலும் விடுவிக்கப்பட்டதால் சுரேந்தர் கோலி உடனடியாக சிறையில் இருந்து வெளியே வர வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: