ஆரணி, ஜன.5: திருவண்ணாமலை மாவட்டத்தில் மீன்வளத்துறை சார்பில் ₹4 லட்சம் மதிப்பில் 2 லட்சம் மீன் குஞ்சுகள் வளர்ப்பு திட்டத்தை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஒன்றியத்திற்குட்பட்ட சேவூர் ஊராட்சியில் உள்ள ரகுநாதபுரம் ஏரியில் மீன்வளதுறை சார்பில் மீன் வளர்ப்பு திட்டத்தில் மீன் குஞ்சு விடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் சந்தீப் நந்தூரி தலைமை தாங்கினார். வேலூர் மீன்வளத்துறை உதவி இயக்குநர் கங்காதரன், மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநர் அரவிந்த், பிடிஓ மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மீன்வளத்துறை ஆய்வாளர்(பொறுப்பு) இளங்கோ வரவேற்றார். இதில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கலந்து கொண்டு, சேவூர் பெரிய ஏரியில் மீன் வளர்ப்பு திட்டத்தில் மீன் குஞ்சுகள் விட்டு தொடங்கி வைத்து பேசியதாவது: மீன்வளத்துறை மூலம் மாவட்டத்தில் உள்ள ஊராட்சி குளங்கள், ஏரிகளில் வளர்ந்த மீன்குஞ்சுகள் வளர்ப்பதன் மூலம் மாவட்டத்தில் மீன் உற்பத்தியை அதிகப்படுத்த முடியும். இதனால் ஊராட்சிக்கு வருவாய் அதிகப்படுத்தவும், கிராம மக்களின் வேலை வாய்ப்பை உருவாக்கலாம்.