மோகனூர் அருகே வாலிபர் கொலையில் 3 பேர் அதிரடி கைது

நாமக்கல், ஜன.4: மோகனூர் அருகே, வாலிபரை கழுத்து அறுத்து கொலை செய்த 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நாமக்கல் மாவட்டம், மோகனூரை அடுத்த ஒருவந்தூரை சேர்ந்த முருகேசன் மகன் சசிகுமார் (24). இவரை, கடந்த 2ம் தேதி இரவு அதே பகுதியை சேர்ந்த சரக்கு ஆட்டோ டிரைவர் மலர் மன்னன், அவரது நண்பர்கள் ரஞ்சித் (27), பிரகாஷ் (24) ஆகியோர் சேர்ந்து, கத்தியால் கழுத்தை அறுத்தனர். இதில் படுகாயம் அடைந்த சசிகுமார், சேலம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு தீவிர சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து, மோகனூர் இன்ஸ்பெக்டர் கணேசன் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த கொலை வழக்கு தொடர்பாக நேற்று மாலை, மலர்மன்னன், ரஞ்சித், பிரகாஷ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், மலர்மன்னன், சசிகுமாரின் சகோதரியை கேலி கிண்டல் செய்துள்ளார். இதுதொடர்பாக சசிகுமாருக்கும், மலர்மன்னனுக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இதனால், சசிகுமார் மீது வெறுப்பில் இருந்து வந்த மலர்மன்னன், பகையை மனதில் வைத்துக் கொண்டு, அவருடன் பழகி வந்துள்ளார். தன்னுடைய முன்விரோதத்தை தீர்த்து கொள்வதற்காக, நண்பர்களுடன் சேர்ந்து  சசிகுமாரை கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து கைதான 3 பேரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: