தோப்புத்துறையில் மாநில அளவிலான ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி

வேதாரண்யம், ஜன.4: தோப்புத்துறையில் மாநில அளவிலான ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி நடந்தது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த தோப்புத்துறையில் மாநில அளவிலான ஆடவர் இரட்டையர் இறகுபந்து போட்டி மின்னொளியில் நடைபெற்றது. இப்போட்டியினை ஜமாஅத் மன்ற தலைவர் ஜபருல்லாகான் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ வேதரத்தினம் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் வேலூர், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், கடலூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, நாகை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர். இறுதி சுற்றுக்கு வேலூர் மற்றும் நாகை அணிகள் முன்னேறியது. முதலிடத்தை வேலூர் அணியும், இரண்டாம் இடத்தை நாகை அணியும், மூன்றாம் மற்றும் நான்காம் இடத்தை தோப்புத்துறை மற்றும் வேதாரண்யம் அணி வீரர்கள் முறையே பெற்றனர். முதல் நான்கு இடத்தை பெற்ற அணி வீரர்களுக்கு ரொக்க பரிசும், சுழற்கோப்பையும் வழங்கப்பட்டது. இப்போட்டியில் ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு போட்டியாளர்களை உற்சாகப்படுத்தினர்.

Related Stories: