குளச்சல்,ஜன.1: குறும்பனையில் திடீர் கடல் சீற்றம் ஏற்பட்டது. இதனால் வீடுகள் இடிந்தன. குமரி மாவட்டம் குளச்சல் அருகே குறும்பனை சகாய மாதா தெருவில் 15 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.ஆண்டுதோறும் ஜூன்,ஜூலை மாதங்களில் ஏற்படும் கடல் சீற்றத்தினால் இந்த தெருவில் உள்ள வீடுகளை கடல் நீர் சூழ்வது வழக்கம். இதனால் மீனவர்கள் தங்கள் வீடுகளை பாதுகாத்துக்கொள்ள மணல் மூடைகளை அடுக்கி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை முதல் குறும்பனையில் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகிறது. வீட்டை சுற்றி வைக்கப்பட்டிருந்த மணல் மூடைகள் சரிந்து கடலில் விழுந்தன. அங்கு கடலரிப்பு ஏற்பட்டு ஜெயசீலன் (40)என்பவரது வீடு மற்றும் அருகிலுள்ள மற்றொரு வீடும் இடிந்து விழுந்தது. அப்போது வீட்டில் தூங்கி கொண்டிருந்த ஜெயசீலன் மற்றும் அவரது மனைவி,2 குழந்தைகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். அந்த பகுதியில் உள்ள வீடுகள் கடலரிப்பால் கடலில் சரியும் அபாய நிலையில் காணப்படுகிறது. மேலும் தென்னை மரம் நிற்கும் பகுதிவரை கடல் நீர் வருவதால், மணலரிப்பு ஏற்பட்டு தென்னை மரங்களும் கடலில் சரியும் அபாயத்தில் உள்ளது.