தஞ்சை, டிச. 31: தஞ்சை மாநகராட்சியில் வணிக நிறுவனங்களிடமிருந்து தொழில் வரியாக ரூ.3.50 கோடி நிலுவை உள்ளதால் வசூல் செய்ய சிறப்புக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக ஆணையர் ஜானகி ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாநகராட்சி எல்லைக்குள் தொழில் செய்யும் அரையாண்டு வருமானம் ரூ.21 ஆயிரத்துக்கும் மேல் உள்ள வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், சிறு வியாபாரிகள் மாநகராட்சி சட்டம் மற்றும் தொழில் வரி சட்டத்தின்படி ஒவ்வொரு அரையாண்டும் மாநகராட்சிக்கு தொழில்வரி செலுத்த கடமைப்பட்டவர்கள். இந்த தொழில்வரி என்பது சம்பந்தப்பட்ட தனிநபர்கள், நிறுவனங்கள் குறிப்பிட்ட அரையாண்டு காலத்தில் தொழில் செய்துள்ளனர் என்பதற்கு சான்றாகும். இந்த தொழில் வரியை செலுத்தும் தனிநபர்கள், நிறுவனங்கள் தாங்கள் செலுத்தும் தொழில் வரியை ஆண்டு வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது வருமானத்தில் கழித்து கொள்ளவும் வழிவகை உள்ளது. மேலும் வங்கியில் கடன் பெறுவதற்கும், பல்வேறு உரிமங்கள் பெறுவதற்கும் இந்த தொழில்வரி ரசீதை ஆவணமாக பயன்படுத்தி கொள்ளலாம்.