கார் புகுந்து தீ விபத்து பைக் பட்டறை எரிந்து நாசம் ராசிபுரம் அருகே பரபரப்பு

ராசிபுரம், டிச.29: ராசிபுரம் அருகே விபத்துக்குள்ளான கார் திடீரென தீப்பற்றிக்கொண்டதில் பைக் பட்டறை எரிந்து நாசமானது. ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த குமார். இவர், நேற்றிரவு 8 மணியளவில் புதுப்பாளையம் சாலையில் காரில் சென்று கொண்டிருந்தார். மின்வாரிய காலனி பகுதியில் சென்றபோது,  கட்டுப்பாட்டை இழந்த கார் தறிகெட்டு ஓடியது. திடீரென சாலையோரம் இருந்த பைக் பட்டறைக்குள் புகுந்தது. இதில், காரின் முன்பகுதி தீப்பிடித்து எரிந்தது. சிறிது நேரத்தில் பட்டறை முழுவதும் தீ பிரவியது.

இதில், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்குகளும் சேதமடைந்தன. மேலும், அங்குள்ள டீக்கடையில் இருந்த பத்மா என்பவர் மீது கார் மோதியதில் காலில் படுகாயமடைந்தார். எலும்பு முறிந்ததால் வலியால் அலறி துடித்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். சம்பவம் குறித்து தகவலறிந்த அமைச்சர் சரோஜா அங்கு விரைந்து சென்று மீட்பு பணிகளை தீவிரப்படுத்தினார். மேலும், அரசு மருத்துவமனைக்கு சென்று விபத்தில் காயமடைந்த பெண்ணுக்கு ஆறுதல் கூறி முதலுதவி சிகிச்சையளித்தார். இந்த விபத்து குறித்து ராசிபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பியோடியவரை தேடி வருகின்றனர்.

Related Stories: