முடங்கிய IRCTC இணையதளம் மீண்டும் செயல்படத் தொடங்கியது!

 

சென்னை: முடங்கிய IRCTC இணையதளம் செயல்படத் தொடங்கிய நிலையில் ரயில் தட்கல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 20ம் தேதி கொண்டாடப்படுகிறது. தொடர் விடுமுறை நாட்கள் என்பதால் சென்னையில் வசிக்கும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். இதையொட்டி சென்னையில் இருந்து திருநெல்வேலி, நாகர்கோவில், தூத்துக்குடி, செங்கோட்டை, கோவை, பெங்களூர், திருவனந்தபுரம், கொல்லம் உட்பட பல்வேறு நகரங்களுக்கு சிறப்பு ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆம்னி பஸ்களில் கட்டணம் அதிகரித்துள்ள நிலையில், குடும்பத்துடன் செல்லும் பெரும்பாலானோர் ரயில்களில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வருகிறார்கள். இதனால் சிறப்பு ரயில்களில் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்து வருகின்றன. பெரும்பாலான ரயில்களில் காத்திருப்போர் பட்டியல் 100-ஐ தாண்டியுள்ளது. ஆம்னி பஸ்களை விட ரயில்களில் கட்டணம் குறைவு என்பதால், வழக்கமான ரயில் மற்றும் சிறப்பு ரயில்களில் டிக்கெட் கிடைக்காதோர் அடுத்ததாக பயணம் செய்யும் ஒரு நாளுக்கு முன்னதாக கூடுதல் கட்டணம் செலுத்தி தட்கல் முறையில் டிக்கெட் எடுக்க காத்திருந்து வருகின்றனர்.

இந்நிலையில் தீபாவளியை ஒட்டி தட்கல் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முயற்சிப்பவர்களால் ரயில்வே (IRCTC) இணையதளம் முடங்கியது. காலை 11 மணிக்கு தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஏராளமானோர் முயற்சி செய்ததால் ரயில்வே இணையதளம் முடங்கியது. இதனால் தீபாவளியை ஒட்டி நாளை (அக்.18) பயணிக்க தட்கல் முன்பதிவுக்கு காத்திருந்த பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அடுத்த ஒரு மணி நேரத்திற்கு ரயில் டிக்கெட் முன்பதிவு மற்றும் டிக்கெட்டுகளை ரத்து செய்ய இயலாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், முடங்கிய IRCTC இணையதளம் செயல்படத் தொடங்கிய நிலையில் ரயில் தட்கல் முன்பதிவு நடைபெற்று வருகிறது. சுமார் 40 நிமிடங்கள் இணையதளம் முடங்கியதால் காலை 11 மணிக்கு தொடங்கிய தட்கல் முன்பதிவு செய்ய முடியவில்லை. அதேநேரம் ரயில் நிலைய முன்பதிவு கவுன்டர்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு 11 மணிக்கே தொடங்கியது. ரயில் நிலையங்களில் எளிதாக தட்கல் டிக்கெட் கிடைத்ததால் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

 

Related Stories: