சென்னை: தமிழ்நாட்டில் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின், சென்னையின் முக்கிய தொகுதியான சேப்பாக்கம்-திருவல்லிக்கேணியில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். 2021 சட்டமன்ற தேர்தலில் இதே தொகுதியில் பெரும் வெற்றி பெற்று அமைச்சராகப் பொறுப்பேற்ற அவர், இந்த முறை தொகுதி மக்களின் நம்பிக்கையை மீண்டும் பெறும் வகையில் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
நேற்று காலை வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், மாலையே தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார். சேப்பாக்கம் தொகுதியில் சிறுபான்மையின சமூக அமைப்பினருடன் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கலந்துரையாடல் நடத்தினார். அப்போது பேசிய அவர்; நானும் உங்கள் குடும்பத்தில் ஒருவன் என்கிற உணர்வோடுதான் இங்கு வந்துள்ளேன். மிக முக்கியமான காலகட்டத்தில் நாம் இருக்கிறோம். மதநல்லிணக்கத்துக்கும் பாசிசத்துக்கும் நடக்கும் தேர்தல்; சிறுபான்மையினருக்கு திமுக அரசு எண்ணற்ற திட்டங்களை நிறைவேற்றியுள்ளது.
பாஜக ஆளும் வடமாநிலங்களில் சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் நிலவுகிறது. வடமாநிலங்களைப் போல தமிழ்நாட்டிலும் வன்முறையை தூண்ட முயற்சிக்கின்றனர். திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைய சிறுபான்மை மக்கள் துணை நிற்க வேண்டும் என்று கூறினார்.
