திருவாரூர், டிச.28: திருவாரூர் மாவட்டம் நன்னிலம் திருக்கொடியலூர் சனி பகவான் கோயிலில் நேற்று நடைபெற்ற சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பேரளம் அருகே உள்ள திருக்கொடியலூரில் புகழ்பெற்ற அகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளது. இந்து சமய அறநிலையதுறை கட்டுப்பாட்டில் இருந்து வரும் இக்கோயிலில் சனீஸ்வரதோஷத்திலிருந்து விடுபட இந்திரனும் இக்கோயிலில் வழிபட்டதாக ஐதீகம். மேலும் சனிப்பெயர்ச்சி நாளில் இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று அதிகாலை 5.22 மணிக்கு சனீஸ்வர பகவான் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்கு பிரவேசிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி இந்த சனிப் பெயர்ச்சி விழாவில் இக்கோயிலின் அனுகிரஹமூர்த்தியான மங்கள சனீஸ்வர பகவானுக்கு சிறப்பு சனி பரிகார ஹோமமும், அபிஷேகமும் நடைபெற்றது.