வங்கக்கடல் பகுதிகளில் நாளை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : வங்கக் கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வரும் 30ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும், நாளை முதல் ஒரு சில இடங்களில் கனமழை கொட்டும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது. இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், ” மேற்கு வங்காளம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஒடிசா – வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை வடக்கு ஒடிசா மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் – மேற்கு வங்க பகுதிகளில் நிலவுகிறது. இது அடுத்த 12 மணிநேரத்தில் வலுகுறையக்கூடும். மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக மத்திய மியான்மர் கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இதன் காரணமாக வடக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுதினம் தெற்க்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, தெற்கு ஒடிசா – வடக்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் வரும் 27ம் தேதி கரையை கடக்கும்.இதன் காரணமாக தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று முதல் வருகிற 30-ந்தேதி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35-36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். இன்று முதல் 28-ந்தேதி வரை தென் தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். “இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: