காஞ்சிபுரம்: தமிழகத்தில் கால் ஊன்ற நினைக்கும் பாஜவின் கனவு பலிக்காது என, காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி விஸ்வநாதன் தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் எம்பி விஸ்வநாதன் நேற்று, காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு தரிசனம் செய்தார். பின்னர், காஞ்சிபுரம் நகராட்சி அலுவலகத்தில் உள்ள காந்தி சிலை, மார்க்கெட் பகுதியில் உள்ள காமராஜர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது. காங்கிரஸ் கட்சியில் 30 ஆண்டுகளாக போர்வீரனாக பணியாற்றுகிறேன். அதனால் நான், அகில இந்திய செயலாளர் மற்றும் கேரள மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கிறேன். ஏற்கனவே, கேரளா, கர்நாடகா, தெலங்கானா, குஜராத் ஆகிய மாநிலங்களில் தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றி இருக்கிறேன்.