கும்பகோணம், டிச. 18: கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் மூர்க்க நாயனாரின் குருபூஜை விழா நடந்தது. 63 நாயன்மார்களில் ஒருவரும், கும்பகோணத்தில் வாழ்ந்து தொண்டாற்றி முக்தியடைந்த மூர்க்க நாயனார் குருபூஜை வழிபாடு ஆண்டுதோறும் கார்த்திகை மாத மூலம் நட்சத்திரத்தில் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் சுவாமி கோயிலில் நடக்கிறது. அந்த வகையில் நடந்த விழாவில் காலை 8 மணிக்கு அறுபத்து மூவர் சன்னதியில் மூர்க்க நாயனாருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 6 மணிக்கு கோயில் பிரகாரத்தில் மூர்க்க நாயனார் புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவருக்கு சந்தனக்காப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடந்தது. பின்னர் பாபநாசம் அரசு பள்ளியில் பிளஸ்2 படித்த நல்லூரை சேர்ந்த மாணவி ஆர்த்தி, தேசிய அளவிலான கோகோ போட்டியில் 3ம் இடம் பெற்று சாதனை படைத்ததற்கு ஊக்கப்பரிசு வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.