சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒரு பெண் குழந்தை உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு வரும் 21ம் தேதி கடைசி நாள்

வேலூர், டிச.16: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒரு பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ வாரியம் உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பை முடித்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ வாரியம் சமீபத்தில் அறிவித்தது. பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலும் திறமையான மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 10ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11, 12ம் வகுப்புகளை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்கு தகுதியானவர்கள். எனினும் அப்பள்ளிகளில் மாதந்தோறும் கல்விக்கட்டணம் ₹1,500க்கு மேல் இருக்கக்கூடாது. இந்திய குடிமகன்கள் மட்டுமே இச்சலுகை பெற தகுதியானவர்கள். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ₹500 உதவித் தொகையை சிபிஎஸ்இ வழங்கும்.

இதற்கு விண்ணப்பிக்க டிசம்பர் 10ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. விண்ணப்ப படிவத்தை புதுப்பிக்கவும், சமர்ப்பிக்கவும் கடைசி நாளாக டிசம்பர் 28ம் தேதியாகவும் இருந்தது. இந்நிலையில் கடைசி நேரத்தில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சிபிஎஸ்இ இணையதளத்தில் உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனதாக புகார் எழுந்தது. இதனால் பெற்றோர் மற்றும் மாணவிகளின் வேண்டுகோளை ஏற்று, உதவித்தொகையை பெற விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 21ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல் விண்ணப்பப் படிவத்தை புதுப்பிக்கவும், சமர்ப்பிக்கவும் வேண்டிய காலஅவகாசம் அடுத்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி வரையும் நீட்டிக்கப்பட்டுள்ளதாக சிபிஎஸ்இ வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: