வேலூர், டிச.16: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் ஒரு பெண் குழந்தைகளுக்கான உதவித்தொகை பெறுவதற்கான காலஅவகாசத்தை நீட்டித்து சிபிஎஸ்இ வாரியம் உத்தரவிட்டுள்ளது. 10ம் வகுப்பை முடித்த ஒற்றை பெண் குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ வாரியம் சமீபத்தில் அறிவித்தது. பெண் குழந்தைகளிடையே கல்வியை ஊக்குவிக்கும் பெற்றோரின் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையிலும் திறமையான மாணவிகளுக்கு ஊக்கமளிக்கும் விதமாகவும் இந்த உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி 10ம் வகுப்பில் 60 சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களை பெற்றுள்ள மாணவிகள் மற்றும் 11, 12ம் வகுப்புகளை சிபிஎஸ்இ மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் இதற்கு தகுதியானவர்கள். எனினும் அப்பள்ளிகளில் மாதந்தோறும் கல்விக்கட்டணம் ₹1,500க்கு மேல் இருக்கக்கூடாது. இந்திய குடிமகன்கள் மட்டுமே இச்சலுகை பெற தகுதியானவர்கள். இதன் மூலம் இரண்டு ஆண்டுகளுக்கு மாதந்தோறும் ₹500 உதவித் தொகையை சிபிஎஸ்இ வழங்கும்.