சென்னை: சென்னை தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், தமிழ்நாட்டின் உயிரியல் பல்வகை பாதுகாப்பு முயற்சிகளை வலுப்படுத்தும் வகையில் சென்னை மாநகரின் உயிரியல் பல்வகை குறியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இது தமிழ்நாட்டின் முதலாவது நகர உயிரியல் பல்வகை குறியீடு, உயிரியல் பல்வகையை நகர திட்டமிடலில் ஒருங்கிணைக்கும் வழிகாட்டி, பசுமை விரிப்பை விரிவுபடுத்தும் திட்டங்கள், கார்பன் சேமிப்பு, வெப்பக் குறைப்பு மற்றும் பொது சுகாதார மேம்பாட்டு ஆகியவற்றில் இந்த தரவுகளின் பங்களிப்புகள் இடம்பெற்றுள்ளன.
தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சதுப்பு நில மீட்பு, பசுமை தமிழ்நாடு திட்டம், காலநிலை மாற்ற திட்டம், கடலோர பாதுகாப்பு திட்டம் போன்ற பல முயற்சிகளின் விளைவாக இந்த குறியீடு தயாரிப்பு சாத்தியமாகியுள்ளது. சென்னை நகர உயிரியல் பல்வகை குறியீடு “ஐசிஎல்இஐ தெற்காசியா”, “சென்னை மாநகராட்சி” மற்றும் பிற அமைப்புகளுடன் இணைந்து உருவாக்கப்பட்டது.மேலும் 5 நகரங்களுக்கு உயிரியல் பல்வகை குறியீடு உருவாக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இந்நிகழ்ச்சியில், வனம் மற்றும் கதர்த்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் முருகானந்தம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் (வனத்துறை தலைவர்) னிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தமிழ்நாடு உயிர்ப் பல்வகைமை வாரியத்தின் உறுப்பினர் செயலர் மித்தா பானர்ஜி, ஐசிஎல்இஐ தெற்காசியா செயல் இயக்குநர் எமனி குமார் இணை இயக்குநர் மோனலிசா சென் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
