வங்கிகள் கடன் வழங்க மறுப்பு மாற்றுத்திறனாளிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திருச்சி, டிச. 11: கடன் தர மறுப்பதால் அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் நேற்று சோமரசம்பேட்டையில் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயிகளுக்கு விவசாய கடன், பொதுமக்களுக்கு தொழில் கடன் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் பல்வேறு கடன் என மத்திய மாநில அரசுகள் வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் ஒரு சில வங்கிகளில் பல்வேறு காரணங்களை கூறி கடன்கள் வழங்க மறுத்துவிடுகின்றனர். இதில் திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டை மற்றும் நவலூர் குட்டப்பட்டில் உள்ள வங்கி கிளைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு கடன் வழங்க மறுப்பதாக குற்றம் சாட்டி நேற்று சோமரசம்பேட்டையில் உள்ள தனியார் வங்கி முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் அல்லித்துறை நிர்வாகி ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாநகர் மாவட்ட தலைவர் ெஜயபால், மாவட்ட செயலாளர் கோபிநாத், மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ் உள்பட ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்துகொண்டு வங்கிக்கு எதிராக கோஷமிட்டனர்.

Related Stories: