குலசேகரம், டிச.11: சுருளோடு ஊராட்சிக்குட்பட்ட மலைகிராமம் கூவகாட்டு மலை. இப்பகுதியை பிற பகுதிகளுடன் இணைக்கும் கூவகாட்டுமலை - கொட்டைப்பாறை இணைப்பு சாலை பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது. இந்தசாலையை சீரமைப்பதற்கு சுருளோடு ஊராட்சி தலைவர் விமலா சுரேஷ் முயற்சி மேற்கொண்டதையடுத்து கொட்டப்பாறையிலிருந்து கூவகாட்டுமலை வரையிலான 2 கிமீ சாலையை சீரமைக்க மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையிலிருந்து ₹45 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. நிதி ஒதுக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடையும் நிலையில் வனத்துறை, சாலை அமைக்க அனுமதியளிக்காததால் பணி கிடப்பில் கிடக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் கூடுதல் கலெக்டர் மெர்சி ரம்யா இந்தபகுதியை 2 கிமீ தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். அவருடன் வனத்துறை அதிகாரிகள், திருவட்டார் ஊராட்சி ஒன்றிய ஆணையளர் ராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் தாஸ், பொறியாளர் ரெஜின், ஊராட்சி தலைவர் விமலா சுரேஷ் மற்றும் பலர் ஆய்வில் கலந்துகொண்டனர். இதனையடுத்து உடனடியாக சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதியளித்தார்.