திருமயம், டிச.11: அரிமளம் அருகே காலம் தவறி பெய்த மழை மற்றும் கால்நடைகள் மேய்ச்சலை கட்டுப்படுத்தமுடியாமல் நெற்பயிர் அழிந்து போனதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள ஆயங்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள விவசாயிகள் கல்லியவயலில் பருவமழையை நம்பி சுமார் 40 ஏக்கருக்கு மேல் சம்பா பயிர் நடவு செய்ய இரண்டு மாதங்களுக்கு முன் நாற்றங்கால் அமைத்தனர். இதனை தொடர்ந்து பருவமழை சரிவர பெய்யாததால் அவ்வப்போது பெய்த மழை நீரை கொண்டு பல ஆயிரங்கள் செலவு செய்து நடவு செய்தனர். இந்நிலையில் மீண்டும் எதிர்பார்த்த அளவு மழை இல்லாததால் நடவு செய்த பயிர்கள் கருக ஆரம்பித்தது. இதனால் விவசாயிகள் என்ன செய்வது என்று திணறிய நிலையில் கடந்த வாரம் குறிப்பிடத்தகுந்த அளவு அப்பகுதியில் பருவமழை பெய்தது. இதனால் நெற்பயிர்களும் வளரத் தொடங்கியது.