வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே சங்கராபுரம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிவர் புயல் மற்றும் புரெவி புயலால் 200க்கும் மேற்பட்ட ஏரிகள், குளங்கள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. இதனால் இந்த ஆண்டு விவசாயம் செய்யும் விவசாயிகள் போதிய நீர்வரத்து உள்ளதால் விவசாய பணிகளை மேற்கொள்ள முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வாலாஜாபாத் சுற்றி உள்ள பல்வேறு ஏரிகளின் மதகுகள் மற்றும் கரைகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. வாலாஜாபாத் அடுத்த சங்கராபுரம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து முழு கொள்ளளவை எட்டி உள்ள நிலையில் நேற்று காலை ஏரியின் மதகு அருகாமையில் நீர் கசிந்து உடைப்பு ஏற்பட்டு வயல்வெளிகள் முழுவதும் நீர் நிரம்பி ஓடையின் வழியாக வெளியேறின.