விபத்தில் இறந்த என்எல்சி பொறியாளர் குடும்பத்திற்கு ரூ.2.16 கோடி நஷ்டஈடு

கடலூர், ஆக. 7: விபத்தில் இறந்த என்எல்சி பொறியாளர் குடும்பத்திற்கு ரூ.2.16 கோடி நஷ்டஈடு வழங்க கடலூர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி பிளாக்-13ஐ சேர்ந்தவர் பழனி. இவர் என்எல்சி இளநிலை பொறியாளராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி நெய்வேலி மகாத்மா காந்தி சாலை பிளாக் 18 ஓ.பி.சி அலுவலகம் எதிரில் தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த கார் மோதி சம்பவ இடத்திலேயே பழனி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து நெய்வேலி டவுன்ஷிப் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடந்து வந்தது. மேலும் இறந்த என்எல்சி இளநிலை பொறியாளர் பழனி குடும்பத்திற்கு கடலூர் மூத்த வழக்கறிஞர் சிவமணி, வழக்கறிஞர்கள் சரவணன், முகுந்தன், சத்யா ஆகியோர் மூலம் நஷ்டஈடு வழங்க சிறப்பு மாவட்ட நீதிமன்றம் எண் 1ல் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கில் இறந்த பழனி குடும்பத்தாருக்கு ரூ.1 கோடியே 95 லட்சத்து 39 ஆயிரம் மற்றும் 7.5 சதவீதம் வட்டியுடன் என மொத்தம் ரூ.2.16 கோடி நஷ்டஈடு வழங்க சம்பந்தப்பட்ட காப்பீட்டு நிறுவனத்துக்கு நீதிபதி ஆனந்தன் உத்தரவிட்டார்.

Related Stories: