சேந்தமங்கலம், மார்ச் 20: காளப்பநாயக்கன்பட்டியில் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்ட பிரச்னை குறித்து, தாசில்தார் தலைமையில் நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தை சுமூக தீர்வு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது. சேந்தமங்கலம் அடுத்துள்ள காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 6வது வார்டு மெயின் ரோடு பகுதியில், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இந்த தொட்டியில் இருந்து, அப்பகுதி பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு, அதே பகுதியை சேர்ந்த ஒருவருக்கு புதிய குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. அதனை அதே பகுதியை சேர்ந்த ஒரு சமூகத்தினர், பேரூராட்சி அனுமதியின்றி துண்டித்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. சேந்தமங்கலம் போலீசார் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானம் செய்து, பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்தனர்.