நாகர்கோவில், பிப்.26: தேசிய கடல் மீன்வள ஒழுங்கு முறை மற்றும் மேலாண்மை மசோதா தொடர்பாக நாகர்கோவிலில் இன்று (26ம் தேதி) கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.தேசிய கடல் மீன்வள (ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை) மசோதா 2019 விரைவில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த மசோதாவை நிறைவேற்றும் முன்பாக மீனவ மக்களின் கருத்தை அறிய அரசு கருத்து கேட்பு கூட்டங்களை நடத்துகிறது. அந்த வகையில் குமரி மாவட்டத்தில் இன்று (26ம் தேதி) புதன் கிழமை காலை 11 மணிக்கு நாகர்கோவிலில் குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. இது தொடர்பாக கருத்து கூற பொதுமக்களுக்கும் மீன் துறை சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கடலில் 20 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் உரிமம் இன்றி மீன் பிடிக்க இயலாது. உரிமத்தை நிராகரித்தல், உரிமம் எடுத்தால் கூட அதனை திரும்ப பெறுதல் போன்றவற்றுக்கு மத்திய அரசுக்கு அதிகாரத்தை இம்மசோதா வழங்குகிறது.