திருவாரூர், ஜன. 29: மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முலம் பிப்ரவரி 1 ம் தேதியன்று திருவாரூரில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது என்றும் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் முகாமில் பங்கேற்று பலனடைய மாவட்ட கலெக்டர் அழைப்பு விடுத்துள்ளார். இதுகுறித்து திருவாரூர் கலெக்டர் ஆனந்த் விடுத்துள்ள செய்திக் குறிப்பில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் முலமாக, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் பிப். 1 ம் தேதி (சனிக்கிழமை) அன்று காலை 8.30 மணிக்கு திருவாரூர், கும்பகோணம் சாலையில் உள்ள வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெறுகிறது. முகாமில் 50க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொள்வதால், மாவட்டத்தில் படித்து முடித்து வேலை தேடும் இளைஞர்கள் 18 வயதிற்கும் மேற்பட்டவர்கள் 8ம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரையிலும், ஐடிஐ, டிப்ளமோ மற்றும் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டு பயன் பெறலாம். இதுவரை 3155 பணியிடங்களுக்கான காலியிட அறிவிப்பு பெறப் பட்டுள்ளது.