திருவாரூர், டிச.4: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு உரிய அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தேசிய நல குழு உறுப்பினர் சுந்தரிடம் மனு அளிக்கப்பட்டது. இந்திய ரயில்வேயின் பயணிகள் நலக்குழு தேசிய உறுப்பினர் சுந்தர் நேற்றுமுன்தினம் கும்பகோணம் ரயில் நிலையத்திற்கு வந்தார். அவரிடம் திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் தலைவர் தணிகாசலம் ,செயலாளர் பாஸ்கரன் ஆகியோர் கோரிக்கை மனு ஒன்றினை அளித்தனர். அதில் திருவாரூர் ரயில் நிலையத்தில் தேவையான அனைத்து இடங்களிலும் மேற்கூரையுடன் கூடிய இருக்கைகள் அமைத்துத் தரவேண்டும், அனைத்து நடை மேடைகளிலும் கழிவறை மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தி தர வேண்டும், ரயில் நிலையத்தின் முகப்பில் பெயர்ப்பலகை அமைத்திட வேண்டும் மற்றும் ரூ ஆயிரம்கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள திருவாரூர் - காரைக்குடி அகல ரயில் பாதையில் விரைவு ரயில் சேவையினை துவங்கிட வேண்டும்.