கன்னியாகுமரி நவ. 14: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் வரும் 17ம் தேதி முதல் ஜனவரி மாதம் 20ம் தேதி வரை அய்யப்ப பக்தர்கள் சீசன் காலமாகும். இதையொட்டி கன்னியாகுமரி சிறப்புநிலை பேரூராட்சி சார்பில் கடற்கரை சாலை, சன்னதி தெரு, பொதுப்பணித்துறை அரசு விருந்தினர் மாளிகை முன்பு இருந்து காந்தி பஜார் வரை உள்ள மெயின் ரோடு ஆகிய 3 இடங்களில் தற்காலிக சீசன் கடைகள் அமைக்க ஏலம் விடப்பட்டது.இதுவரை 2 முறை நடைபெற்ற ஏலம் மூலம் 66 கடைகளை வியாபாரிகள் ஏலம் எடுத்து உள்ளனர். அடுத்த கட்டமாக நாளை (வெள்ளிக்கிழமை) 207 கடைகளுக்கு ஏலம் நடக்கிறது. இதுவரை கடைகள் மற்றும் கார் பார்க்கிங் ஏலம் மூலம் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சிக்கு ₹50 லட்சத்து 63 ஆயிரத்து 539 வருமானம் கிடைத்துள்ளது. சீசன் தொடங்க சில நாட்களே இருப்பதால் ஏலம் எடுத்தவர்கள் கடைகள் அமைக்கும் பணிகளை தொடங்கி விட்டனர். கடற்கரை சாலை, மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் பேரூராட்சி சார்பில் அளவிடப்பட்டுள்ள இடத்தில் கம்புகளை கட்டி கடைகள் அமைக்கப்படுகிறது.