போடி, அக். 18: போடியில், நேற்று தரமில்லாத ரேஷன் அரிசி விநியோகம் செய்யப்பட்டதால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், அரிசியை சாலையில் கொட்டி மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.போடி நகராட்சி 1வது வார்டு புதூரில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். இவர்களுக்கு நியாய விலைக் கடை எண் 21 மூலம் ரேஷன் அரிசி உள்ளிட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்படுகிறது. நேற்று காலையில் இந்த கடையில் விலையில்லா அரிசி பொதுமக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது.அந்த அரிசி உபயோகப்படுத்த முடியாத அளவிற்கு மோசமான துர்நாற்றத்துடன் தரமில்லாமலும், புழுக்களுடனும் காணப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால் நியாய விலைக் கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
எங்களுக்கு வழங்கும் அரிசியை தான் நாங்கள் விநியோகம் செய்கிறோம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.