மார்த்தாண்டம், செப்.20: மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க ₹220 கோடியில் இரும்பு மேம்பாலம் கட்டப்பட்டு கடந்த பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி திறந்து வைத்தார். இந்த பாலம் கட்டப்பட்ட சில நாட்களிலேயே பழுது ஏற்பட்டது. ஆரம்பத்தில் இருந்தே காங்கிரீட் பெயர்ந்தது. தண்ணீர் செல்லும் பைப் உடைந்து விழுந்தது. இதற்கிடையே பாலத்தில் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருகின்றன. பல உயிர் இழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த சில தினங்களுக்கு முன் டெம்போ நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்தது. இவ்வாறு தொடர்ந்து விபரீத சம்பவங்கள் நடந்து வருவதால் பொதுமக்கள் அச்சமடைந்தனர். இந்நிலையில் பாலத்தில் அமைக்கப்பட்டுள்ள தார் சாலை சேதமடைந்து மேடு பள்ளமாக காணப்படுகிறது. இதனால் பாலத்தில் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.