முத்துப்பேட்டை, செப்.17: முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு கிழக்கு கடற்கரை சாலையோர பள்ளத்தில்தேங்கி நிற்கும் மழைநீரால் விபத்து ஏற்படும் அவலம் உள்ளது. முத்துப்பேட்டை அடுத்த செம்படவன்காடு பேருந்து நிறுத்தம் கிழக்கு கடற்கரை சாலையோரம் இருபுறமும் பள்ளமான பகுதியாக உள்ளது. இதனால் மழைக்காலத்தில் மழை பெய்யும்போது அதில் மழைநீர் தேங்கி விடுகிறது. அதேபோல் இப்பகுதியில் சாலையில் பெய்யும் மழைநீர் வடிய வாய்க்கால் இல்லாததால் தொடர்ச்சியாக மழை பெய்யும் நேரத்தில் சாலையில் ஆறு போன்று தண்ணீர் தேங்கி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அதே போல் மழை விட்டபிறகு அந்த பள்ளத்தில் தேங்கும் தண்ணீர் பல நாட்கள் கிடந்து அசுத்தமாகி விடுவதுடன் அப்பகுதியில் செல்பவர்கள் வழுக்கி விழும் சூழல் ஏற்படுகிறது.