நாகர்கோவில், ஜூலை 24: தோட்டக்கலை துணை இயக்குநர் அசோக் மேக்ரின் விடுத்துள்ள அறிக்கை: பிரதமமந்திரி பயிர் காப்பீட்டு திட்டம், மாநில அரசின் மானியத்துடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டம் கன மழை, புயல், கடும் வறட்சி போன்ற இடர்பாடுகளின் போது விவசாயிகளுக்கு கைகொடுக்கும். காப்பீட்டு தொகையில் 5 சதவீதம் பிரீமியமாக செலுத்தினால் போதும். குமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம், கிள்ளியூர், தக்கலை, குருந்தன்கோடு, மேல்புறம், முஞ்சிறை, ராஜாக்கமங்கலம், திருவட்டார், தோவாளை ஆகிய வட்டாரங்களில் பரவலாக வாழை, மரவள்ளி, மா சாகுபடி செய்யப்படுகிறது. வாழை பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ₹ 3,790 ஆகும். காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ₹ 75,800 கிடைக்கும். மரவள்ளி பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ₹ 1225 ஆகும். காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கருக்கு ஒன்றுக்கு ₹ 25,500 கிடைக்கும். வாழை, மரவள்ளி காப்பீடு செய்ய கடைசி நாள் 1.10.2019. மா பயிருக்கு ஒரு ஏக்கருக்கு பிரீமியம் ₹ 900 ஆகும். காப்பீடு இழப்பீட்டு தொகை ஏக்கர் ஒன்றுக்கு ₹ 18,000 கிடைக்கும். மா காப்பீடு செய்ய கடைசி நாள் 29.2.2020. மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள், வணிக வங்கிகள், பொதுசேவை மையம்(இ-சேவை மையம்) ஆகியவற்றில் காப்பீடு செய்யலாம். காப்பீடு செய்வதற்கு தேவையான ஆவணங்கள் ஆதார் அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், கணினி பட்டா, அடங்கல் ஆகியவை. விவசாயிகள் தங்கள் வட்டார தோட்டக்கலை அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.