குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த அதிகாரிகள் சிறைபிடிப்பு மருத்துவ குறைபாடால் உயிரிழப்பு தொடர்வதாக குற்றச்சாட்டு

குலசேகரம், ஜூலை 23: குலசேகரம் அரசு மருத்துவமனையில் ஆய்வுக்கு வந்த மருத்துவத்துறை அதிகாரிகளை இந்து முன்னணியினர் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.குமரி மாவட்டத்தில் முக்கியமான அரசு மருத்துவமனைகளில் ஒன்று குலசேகரம் அரசு மருத்துவமனை. சுற்றுவட்டார பகுதிகளில் ஏராளமான மலை கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு பெரும் உயிர்நாடியாக இந்த மருத்துவமனை இருந்து வருகிறது. இங்கு போதிய மருத்துவர்கள் நியமிக்கப்படுவதில்லை. மருத்துவ உபகரணங்கள் இருந்தும் அவற்றை இயக்க ஊழியர்கள் இல்லை. மருத்துவமனை வளாகம் புதர்மண்டி காணப்படுகிறது.அதை சுத்தப்படுத்த நீண்ட காலமாக பொதுமக்கள் கோரிக்கை விடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. குலசேகரம் அரசு மருத்துவமனைக்கு ஏராளமான ஏழை பெண்கள் மகப்பேறு மற்றும் பல்வேறு நோய்களுக்காக வருகின்றனர். இங்கு மகப்பேறு மருத்துவர்கள் இல்லாததால் இங்கிருந்து வேறு மருத்துவமனைகளுக்கும், தனியார் மருத்துவமனைகளுக்கும் திருப்பி அனுப்பப்படுகின்றனர்.

இந்த நிலையில் குலசேகரத்தை அடுத்துள்ள பொன்மனை குளச்சவிளாகம் பகுதியை சேர்ந்தவர் பெயிண்டிங் தொழிலாளி ஜித் (32), தனது மனைவி சரண்யாவை (24) இங்கு அழைத்து சென்றார். கர்ப்ப காலத்தில் இந்த மருத்துவமனையில் மருத்துவ ஆலோசனை பெற்றார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சரண்யாவுக்கு கடந்த 19ம் தேதி மாலை 4.30 மணியளவில் திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.உறவினர்கள் அவரை உடனடியாக குலசேரகம் அரசு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர் இல்லாதால் அங்கிருந்த நர்சுகள், உடனடியாக சரண்யாவை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தினர். இதையடுத்து கணவர் மற்றும் உறவினர்கள் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் நிலைமை மோசமாக உள்ளது. எனவே வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்லுங்கள் என கூறினார்.இதையடுத்து மற்றொரு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அறுவை சிகிச்சை மூலம் சரண்யாவுக்கு குழந்தை பிறந்தது. குழந்தை அபாய கட்டத்தில் இருந்ததால் மருத்துவர்கள் குழந்தையை ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்ட குழந்தை நேற்று முன்தினம் பரிதாபமாக இறந்தது. இதனால் சரண்யாவின் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர்.குலசேகரம் அரசு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவர் இருந்திருந்தால் இந்த சம்பவம் நடந்திருக்காது. இதுபோல் கடந்த சில வாரங்களுக்கு முன் குலசேகரம் மருத்துவமனையில் மருத்துவர் இல்லாமல் பிரசவம் நடந்ததால் ஒரு குழந்தை இறந்தது. இவ்வாறு தொடர்ந்து பிறக்கும் குழந்தை இறக்கும் சம்பவங்கள் நடப்பதால் ேநற்று முன்தினம் இரவு இந்து முன்னணியினர் குலசேகரம் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இரவு மருத்துவர், மகப்பேறு மருத்துவர் உடனடியாக நியமிக்க வேண்டும். பிரசவத்தில் குழந்தை இறப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். குழந்தை இறந்தது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்ததால் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.இந்நிலையில், நேற்று காலை 11 மணியளவில் மருத்துவ துறை துணை இயக்குநர் பிரிட்டோ, பத்மனாபபுரம் அரசு தலைமை மருத்துவமனை தலைமை அதிகாரி ராஜையன் ஆகியோர் குலசேகரம் அரசு மருத்துவமனை வந்து ஆய்வு மேற்கொண்டனர். அதன் பின்னர் அவர்கள் இந்து முன்னணி நிர்வாகிகளுடன் பேச்சவார்த்தை நடத்தினர். அப்போது கட்சியினர், குலசேகரம் அரசு மருத்துவமனையில் உடனடியாக முழுநேர மருத்துவரை பணியில் அமர்த்த வேண்டும். சுகாதார குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும். மகப்பேறு மருத்துவரை நியமிக்க வேண்டும் என்றனர்.அதற்கு மருத்துவ அதிகாரிகள் அனைத்து குறைகளையும் விரைந்து நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து இந்து முன்னணி நிர்வாகிகள், குலசேகரம் அரசு மருத்துவமனையில், மருத்துவர் பணியில் இல்லாததால் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டு, இதனால் ஏற்பட்ட காலதாமதம் மற்றும் அலைச்சலினால் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, தனியார் மருத்துவமனையில் உள்ள மருத்துவ செலவுக்கு குலசேகரம் அரசு மருத்துவமனை நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டுமென வலியுறுத்தினர்.

அதற்கு மருத்துவ அதிகாரிகள், சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்திடம் முழுவிபரம் குறித்து கேட்டறிந்து, இதற்கு தீர்வு காணலாம் என்று கூறிவிட்டு தங்கள் வாகனத்தில் ஏறிச்செல்ல முயன்றனர். இதை ஏற்றுக் கொள்ளாத இந்து முன்னணியினர் மருத்துவ அதிகாரிகளின் வாகனத்தை தடுத்து நிறுத்தி அவர்களை சிறைபிடித்ததோடு, மருத்துவமனை நுழைவு வாயிலில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட செயலாளர் ரவி தலைமையில் நடந்த இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து குலசேகரம் நகர காங். முன்னாள் தலைவர் எபனேசர் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு வந்தனர்.தகவல் அறிந்து குலசேகரம் போலீசார் சம்பவ இடம் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், மருத்துவ செலவினங்களுக்கான தொகை ஈடுசெய்வது குறித்து சுமூக முடிவு ஏற்பட்டது. இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தரம் உயர்த்த வேண்டும்

திருவட்டார் தாலுகா தனியாக பிரிக்கப்பட்டுள்ளதால் குலசேகரம் அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். இங்கு இரவு நேர மருத்துவர்கள், மகப்பேறு மருத்துவர்கள் நிரந்தரமாக நியமிக்க வேண்டும். இங்குள்ள அனைத்து மருத்துவ சிகிச்சை கருவிகளையும் இயக்க போதிய தொழில்நுட்ப பணியாளர்கள் நியமிக்க வேண்டும். பிரசவத்தில் குழந்தை இறப்பதை தடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: