நீடாமங்கலம், மே 23: நீடாமங்கலம் பெரியார்சிலையிலிருந்து சிவன்கோயில்வரை மோசமாக உள்ள சாலை தினகரன் செய்தி எதிரொலியால் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பெரியார் சிலையிலிருந்து சிவன்கோயில்வரை மோசமாக உள்ள சாலையை சீரமைக்கவேண்டும் என கடந்த சில மாதத்திற்கு முன் தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது. அதன்பிறகு தார் சாலை போடப்பட்டது.இந்நிலையில் மழை பெய்ததால் சாலையில் இருபுறமும் சேரும் சகதியுமாகவும், போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது என தினகரனில் மீண்டும் செய்தி படத்துடன் வெளியானது. பின்னர் பெரியார்சிலையிலிருந்து (பேரூராட்சி அலுவலகம் எதிரே) சாலையின் இருபுறமும் ஒரு அடி ஆழம்வரை குழி தோண்டி சிறிது தூரம் கருங்கல் புதைக்கப்பட்டது. சாலையின் எதிரில் கற்கள் புதைக்க கடந்த 2 மாதத்திற்கு முன் பள்ளம் தோண்டப்பட்டது. ஆனால் இதுவரை கற்கள் பதிக்கப்படாததால் கடைகளில் கடைத்தெருவுக்கு செல்லும் முதியவர்கள் சிலர் குழியில் கீழே விழுந்து செல்கின்றனர்.வாகனங்கள் சாலையிலேயே நிறுத்தப்படுகிறது. இந்த செய்தி கடந்த மாதம்26ம் தேதி தினகரனில் படத்துடன் செய்தி வெளியானது.அதன் எதிரொலியால் தற்போது பணி தொடங்கப்பட்டு நடைபெறுகிறது. இதனையறிந்த அப்பகுதி மக்கள் செய்தியை வெளியிட்ட தினகரனுக்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளனர். மேலும் கற்கள் புதைக்கும் போது மழைநீர் விரைவில் வடியுமாறு புதைக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.