திருவாரூர், மே 22: சி.ஐ.டி.யு மாநில செயலாளர்களை விடுதலை செய்ய கோரி திருவாரூரில் நேற்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெரும்புதூரில் கார் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் கொரிய நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஊதிய பாக்கி தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்ட 150 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அந்நிறுவனத்திடம் விளக்கம் கேட்க சென்ற சிஐடியு மாநில செயலாளர்கள் முத்துகுமார் மற்றும் கண்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், உடனடியாக அவர்களை விடுதலை செய்ய வேண்டும். கைது செய்யப்பட்ட 150 தொழிலாளர்களையும் விடுதலை செய்வதுடன் ஊதிய பாக்கியையும் வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று சி.ஐ.டி.யு தொழிற்சங்கத்தினர் பழைய பேருந்து நிலையம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட செயலாளர் முருகையன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் பொறுப்பாளர்கள் பழனிவேல், அனிபா, லெனின், முனியாண்டி, கஜேந்திரன், மணி, மோகன், அம்பேத்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.