இன்று திருமணம் நடக்க இருந்த மணப்பெண் திடீர் மாயம்

நாகர்கோவில், மே 22 : நாகர்கோவில் அருகே இன்று திருமணம் நடக்க இருந்த நிலையில் மணப்பெண் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாகர்கோவில் அடுத்த பள்ளம் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கும், அதே பகுதியை சேர்ந்த வாலிபருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இவர்களின் திருமணம் இன்று (22ம்தேதி) நடக்க  இருந்தது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இரு வீட்டாரும் மும்முரமாக ஈடுபட்டு இருந்தனர். இளம்பெண் வீட்டில் திருமண பந்தல் உள்ளிட்ட பல்வேறு அலங்காரங்கள் கடந்த இரு நாட்களாக நடைபெற்று வந்தன. மணப்பெண் அலங்காரத்துக்கு தேவையான ஏற்பாடுகளும் இளம்பெண் விருப்பப்படியே நடந்தன. உறவினர்களும் திருமணத்துக்காக வருகை தந்தனர். இந்த நிலையில் கடந்த 19ம்தேதி இரவு வழக்கம் போல் வேலைகள் எல்லாம் முடிந்து, இளம்பெண்ணின் பெற்றோர் தூங்க சென்றனர். இளம்பெண் செல்போனில் பேசிய படியே அவரது அறையில் படுத்திருந்தார். மறுநாள் அதிகாலை 3 மணியளவில் இளம்பெண்ணின் தாயார் எழுந்து பார்த்த போது, மகளை காண வில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தனது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார்.

இதனால் அவர்களும் திடுக்கிட்டு விழித்து தேடினர். பின்னர் காலையில் உறவினர்கள், தோழிகளிடம் விசாரித்தனர். ஆனால் இளம்பெண் குறித்து எந்த தகவலும் இல்லை. இதையடுத்து சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.  மணப்பெண்ணாக மணமேடையில் அமர வேண்டியவர் திடீரென மாயமான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மற்றொரு இளம்பெண் மாயம்: நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை பொட்டல்விளை பகுதியை சேர்ந்தவர் சசிக்குமார். இவரது மனைவி அஞ்சலி (29). சம்பவத்தன்று அனைவரும் வீட்டில் தூங்கி கொண்டு இருந்த போது, அஞ்சலி திடீரென மாயம் ஆனார். மறுநாள் காலை அஞ்சலியை காணாமல் பல இடங்களில் தேடினர். அவர் குறித்து எந்த தகவலும் இல்லாததால் இது குறித்து சசிக்குமார் சுசீந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Related Stories: