ஐந்தாண்டுகளுக்கு பின்னர் கணக்கெடுக்கப்படுகிறது தொடக்க கல்வித்துறையில் ஆசிரியர் உபரி பணியிடங்கள் அரசுக்கு ஒப்படைப்பு

நாகர்கோவில், மே 21: தொடக்க கல்வித்துறையில் பள்ளிகளில் உள்ள உபரி பணியிடங்களை கணக்கெடுத்து அரசுக்கு ஒப்படைப்பு செய்ய வேண்டும் என்று இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் உள்ள தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உள்ள ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள் பணியிடங்களுக்கு உரிய நெறிமுறைகள் வழங்கப்பட்டு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் பணியிடங்கள் நிர்ணயம் செய்யவும், உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் செய்யவும் ஆணையிடப்பட்டுள்ளது. அரசாணைப்படி தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் 2013-14 கல்வியாண்டு முடிய உபரி பணியிடங்களாக உள்ள 7270 ஆசிரியர் பணியிடங்களை இயக்குநரின் பொது தொகுப்புக்கு ஈர்க்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.

மேலும் கல்வியாண்டு இடையில் வயது முதிர்வு காரணமாக ஆசிரியர்கள் ஓய்வு பெறும்போது மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக்கூடாது என்பதை கருத்தில் கொண்டு அத்தகைய ஆசிரியர்களுக்கு மறுநியமனம் வழங்கலாம். ஆனால் மறு நியமனம் செய்யும் போது உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் நிலையில் மறு நியமனம் செய்யக்கூடாது என்ற உத்தரவு உள்ளது. தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டு வரை உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் இயக்குநரின் பொது தொகுப்பிற்கு சரண் செய்யப்பட்டது. தற்போது மீதமுள்ள 2014-15, 2015-16, 2016-17 கல்வியாண்டு வரை உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை கணக்கிட்டு மாவட்டம் வாரியாக இயக்குநருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தொடக்க கல்வி இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்த உத்தரவில் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில் ‘தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் 2014-15, 2015-16, 2016-17 மற்றும் 2017-18ம் கல்வி ஆண்டு வரை ஆசிரியரின் உபரியாக உள்ள காலி பணியிடங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்’ என்று உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: