நாகர்கோவில், மே 21: குமரி மாவட்டத்தில் நுங்குகள் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வெளி மாவட்டத்தில் இருந்து அதிகளவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. குமரி மாவட்டத்தில் தற்போது கோடை வெயில் வாட்டி வதைக்கிறது. கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின்னர் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. கோடை வெயிலை சமாளிக்க மக்கள் குளிர்பான கடைகளில் குவிகிறார்கள். கரும்புச்சாறு, பழச்சாறு, பழக்கடைகளில் விற்பனை சூடுபிடித்துள்ளன. பொதுமக்களின் தேவைகள் அறிந்து மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் ஏராளமான குளிர்பான கடைகள் முளைத்துள்ளன. முக்கிய சாலைகளின் இரு பக்கமும் திடீர், திடீரென முளைத்துள்ள கடைகளில் கார், பைக்குகளில் வந்து மக்கள் குளிர்பானங்களையும், பழ வகைகளையும் வாங்கி செல்கிறார்கள். வெயிலின் தாக்கத்தை குறைக்கும் வகையில் பொதுமக்களிடம் தற்போது நுங்கு விற்பனை ஜோராக நடந்து வருகிறது.