திருவாரூர், மார்ச் 15: திருவாரூர் தியாகராஜசுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழா அடுத்த ஏப்ரல் 1ம் தேதி நடைபெறுவதையொட்டி தேர் கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜ சுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமைபீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குரவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் இருந்து வருகிறது. மேலும் பூங்கோயில் என்று அழைக்கப்பட்டு வரும் இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வருகின்றனர். கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஒடை 5 வேலி நிலபரப்பில் அமையப்பெற்றது என்ற சிறப்பினை கொண்ட இக்கோயிலுக்கு மேலும் அழகு சேர்க்கும் வகையில் கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே 2வது மிகப்பெரிய தேர் என்று அழைக்கப்பட்டு வருகிறது.