நாகர்கோவில், மார்ச் 12: குளச்சலை சேர்ந்த சகாயபீட்டர்(45), பொழிக்கரையை சேர்ந்த அமிர்தம் கார்மல் என்ற சுதர்சன்(43), மார்த்தாண்டம்துறையை சேர்ந்த கிறிஸ்தடிமை(23) ஆகியோர் சவுதி அரேபியா நாட்டில் தரீண் என்ற இடத்தில் ஜாப்அல்பரன் என்பவருக்கு சொந்தமான படகில் மீன்பிடி தொழில் செய்து வந்தனர். இவர்கள் கடந்த ஜனவரி 2ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். 5ம் ேததி கடற்கொள்ளையர்கள் வந்து படகை தாக்கினர்.
5ம் தேதி அரபி கடலோர காவல்படைக்கும் கடல் கொள்ளையருக்கு இடையே துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் கடலோர காவல் படையை சேர்ந்த அதிகாரி ஒருவர் இறந்தார். அப்போது அங்கு மீன்பிடித்து கொண்டு இருந்த சகாயபீட்டர், அமிர்தம் கார்மல், சுதர்சன் ஆகியோரை கடற்கொள்ளையர்கள் ஈரான் நாட்டுக்கு கடத்திச்கொண்டு சென்றனர். பின்னர் ஈரான் அரசிடம் சிக்கிய இந்த மீனவர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஈரான் சிறையில் அடைக்கப்பட்ட இந்த மீனவர்களை மீட்க தெற்காசிய மீனவர் தோழமை பொது செயலாளர் சர்ச்சில் முயற்சி மேற்கொண்டார். இந்நிலையில் கடந்த 26ம் தேதி ஈரான் அரசு இந்த 3 மீனவர்களையும் விடுவித்தது. இதையடுத்து விமானம் மூலம் சென்னை வந்த அவர்களை தமிழக அரசின் மீனவளத்துறை கூடுதல் இயக்குநர் ஆறுமுகம், இணை இயக்குநர் ஜூடு ஆம்ஸ்ட்ராங், தெற்காசிய மீனவர் தோழமை சர்ச்சில் ஆகியோர் வரவேற்றனர். பின்னர் தனியார் பஸ் மூலம் நேற்று காலை நாகர்கோவில் வந்த அவர்கள் குமரி மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகத்துக்கு வந்தனர்.