சுட்டெரிக்கும் வெயில் கன்னியாகுமரி வெறிச்சோடியது

கன்னியாகுமரி, மார்ச் 8: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இப்படி வருகின்றவர்கள் காலையில் சூரிய உதயத்தை கண்டு ரசிக்கின்றனர். பின்னர் கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்கின்றனர்.அதன் பின்னர் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலையை பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக படகுகள் மூலம் சென்று பார்த்து மகிழ்கின்றனர். அதனை ெதாடர்ந்து காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவற்றை பார்வையிடுகின்றனர். இது தவிர திரிவேணி சங்கமம் கடற்கரையில் குளித்து மகிழ்வதையும் காண முடியும்.இந்த நிலையில் கடந்த சில நாட்களாக கன்னியாகுமரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் பள்ளித்தேர்வுகள் தொடங்கியுள்ளதால் சுற்றுலா பயணிகள் வருகையும் வெகுவாக குறைந்துள்ளது. நேற்று காலையும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் சுற்றுலா பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி வழியும் கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்பட்டது. திரிவேணி சங்கமம் கடற்கரை பகுதியில் கடைகளிலும் வியாபாரம் டல் அடித்தது. கடற்கரையில் உள்ள பெரும்பாலான தற்காலிக கடைகள் மூடப்பட்டு கிடந்தன.

Related Stories: