இடைத்தேர்தலை எதிர்நோக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர் 3 லட்சத்தை தாண்டியதில் தில்லுமுல்லு?

மதுரை, பிப். 13: இடைத்தேர்தலை எதிர்நோக்கும் திருப்பரங்குன்றம் தொகுதி வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி எகிறியதில் தில்லுமுல்லு நடந்துள்ளதா? என்ற கேள்வி எதிர்க்கட்சியினர் மத்தியில் பூதாகரமாக எழுந்துள்ளது.மதுரை திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. மக்களவை தேர்தலுடன் நடக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றன. இச்சூழலில் கடந்த ஜனவரி 31ல் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதி பட்டியலில் இந்த தொகுதியில் ஆண் 1,49,421, பெண் 1,52,111, திருநங்கை 25 என மொத்தம் 3,01,557 வாக்காளர்கள் உள்ளனர் என்பது தெரிந்தது.திடீரென்று வாக்காளர் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டி எகிறி உள்ளது. இதில் தில்லுமுல்லு நடத்திருக்குமோ? என்று எதிர்கட்சியினர் மத்தியில் கேள்விக்குறி விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஏனென்றால் இந்த தொகுதி 2016 பொது தேர்தல் முதல் வாக்காளர் பட்டியலில் பல்வேறு குழப்பங்கள் காணப்படுகின்றன.அதன் விவரம் வருமாறு:

* சட்டமன்ற தேர்தல் 2016ல் நடைபெற்ற போது திருப்பரங்குன்றம் தொகுதி மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2 லட்சத்து 79 ஆயிரத்து 96 ஆக இருந்துள்ளது. அதில் ஜெயித்த சீனிவேல் மறைந்ததால் 6 மாதத்தில் அதாவது 2016 நவம்பரில் நடைபெற்ற இடைத்தேர்தலில் 2 லட்சத்து 85 ஆயிரத்து 980 ஆக அதிகரித்திருந்தது.

* 2 ஆண்டு இடைவெளியில் வாக்காளர் எண்ணிக்கை உயர்ந்திருக்க வேண்டும். ஆனால் 2018 செப்டம்பரில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 2 லட்சத்து 84 ஆயிரத்து 318 ஆக குறைந்தது. அதாவது 1662 வாக்காளர் போலி வாக்காளர் நீக்கப்பட்டு இருந்தனர். இந்த வாக்காளர் பட்டியலின்படி கடந்த நவம்பரில் எதிர்பார்க்கப்பட்ட இடைத்தேர்தல் நடைபெறவில்லை.

*இதன்பிறகு கடந்த ஜனவரி 1ம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளராக சேர மற்றும் விடுபட்டவர்கள் சேர்த்தல், முகவரி மாற்றங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதன்படி மதுரை மாவட்டத்திலுள்ள 10 தொகுதிகளுக்கும் சேர்த்து மொத்தம் 67,000 மனுக்கள் அளிக்கப்பட்டு இருந்தன. இதில் அதிகபட்சமாக திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 19 ஆயிரம் மனுக்கள் குவிந்தன.

*மனுக்கள் ஆய்வு முடித்து 12 நாட்களுக்கு முன் வெளியான இறுதி வாக்காளர் பட்டியலில் மாவட்டம் முழுவதும் 49 ஆயிரத்து 705 பேர் அதிகரித்திருந்தனர். இதில் திருப்பரங்குன்றம் தொகுதியில் மட்டும் 17 ஆயிரத்து 239 பேர் எகிறியது தான் அதிர்ச்சிக்குரியது. ஏனென்றால் மாவட்டத்திலுள்ள மற்ற 9 தொகுதிகளிலும் தலா சில ஆயிரங்களுடன் மொத்தம் 32 ஆயிரத்து 466 பேர் தான் அதிகரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து எதிர்க்கட்சியினர் கூறும்போது, ‘‘திருப்பரங்குன்றம் தொகுதியில் ஆளும்கட்சியினர் ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி ஓட்டுக்காக பல்வேறு தில்லுமுல்லு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இலவசங்களை வாரி இறைத்துள்ளனர். வாக்காளர் பட்டியலில் இந்த தொகுதியில் மட்டும் அபரிமிதமான எண்ணிக்கை அதிகரித்து இருப்பது முறைகேட்டின் உச்சமாக தோன்றுகிறது. வேறு தொகுதியிலுள்ள வாக்காளர் அதிகாரிகள் துணையோடு இங்கு முறைகேடாக சேர்க்கப்பட்டு இருக்கிறார்களா? என்பதை தேர்தல் ஆணையம் மறு ஆய்செய்து போலி வாக்காளரை நீக்க உடனடி நடவடிக்கை எடுப்பது கட்டாயமாகும்’’ என்றனர்.

Related Stories: