திருவாரூர், டிச.7: திருவாரூர் மாவட்டம் குடவாசலில் அரசுக்கு சொந்தமான விலை உயர்ந்த மரங்கள் அதிமுக பிரமுகர் மூலம் வெட்டப்பட்டுள்ளதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாய சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். கஜா புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் மிகப்பெரிய பாதிப்பை சந்தித்துள்ளது. இதில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மரங்கள் அடியோடு சாய்ந்தன. இந்த மரங்களை அகற்றும் பணியில் நெடுஞ்சாலை துறையினர் மற்றும் உள்ளாட்சி துறையினர் போன்றவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இதுபோன்ற விழுந்த மரங்களை வெட்டினால்போதும் என்று அரசு நிர்வாகம் இருந்து வரும் நிலையில் இதனை காரணமாக வைத்துக் கொண்டு குடவாசல் பகுதியில் உள்ள வி.ஏ.ஒ அலுவலக வளாகம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்காக மூலங்குடியில் இருந்து வரும் விளையாட்டு மைதானம் மற்றும் நிலவள வங்கி வளாகம் உள்பட பல்வேறு அரசு அலுவலகங்களில் நல்ல நிலையில் இருந்து வரும் விலை உயர்ந்த தேக்கு மரங்கள் மற்றும் வேப்ப மரங்கள் போன்றவை அதிமுக பிரமுகர் ஒருவர் மூலம் வெட்டப்பட்டு வருவதை அங்குள்ள அதிகாரிகள் எவரும் கண்டு கொள்ளாதது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து குடவாசல் தாசில்தார் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். மேலும், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பொது மக்களையும் விவசாயிகளையும் திரட்டி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு சேகர் தெரிவித்துள்ளார்.